'மாதங்களும் வாரம் ஆகும்... நானும் நீயும் கூடினால்..!' - ஏன் அப்படி? #TimePsychology
‘காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி’ என்று வைரமுத்து எழுதியதும், ‘மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்’ என்று வாலி எழுதியதும் எதனால்? ‘ஒவ்வொரு நாளும் போறதே தெரியலை. அதுக்குள்ள ஒரு வருஷம் கடந்துடுச்சா, காலேஜ் முடிச்சு இத்தனை வருஷம் ஓடிப்போச்சா, நேத்துதான் பொறந்தா மாதிரி இருந்த குழந்தைங்க அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களே, எனக்கு இவ்வளவு வயசாகிடுச்சா...' என நேரமும் காலமும் விரைவாகக் கடந்து செல்வதை உணர்ந்து பிரமிக்கிறீர்களா? ஏன் இப்படித் தோன்றுகிறது? எப்போதும் அதே கடிகாரம், அதே 24 மணி நேரம், அதே 60 விநாடிகள்தான். பிறகு ஏன் இப்படி ஒரு பிரமிப்பு? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள, பல விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், பிரேசில் உடல்நல உளவியலாளர்கள், `மனிதர்கள் எவ்வாறு `காலம்-நேரம்’ கடப்பதை உணர்கிறார்கள்?' என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் 15 வயதினர் முதல் 89 வயதினர் வரை உள்ள 233 ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும், கண்களை மூடி, 120 விநாடிகளை எண்ணும்படி கூறினர்....